Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், செல்வபெருந்தகை வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு சைபர் க்ரைம் போலீஸ் வலை

சென்னை: போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வீடுகளுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ைரம் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று இரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடு, நடிகர் தனுஷ் வீடு, காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து உடனே போலீசார் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்படி தேனாம்பேட்டை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி காந்த் வீட்டிற்கு சென்றனர். அப்போது நடிகர் ரஜினிகாந்த் எங்கள் வீட்டிற்கு வெளியாட்கள் யாரும் உள்ளே வரவில்லை. இதனால் யாரும் சோதனை நடத்த வேண்டாம் என்று வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். அதைதொடர்ந்து போலீசார் அவரது வீட்டின் கேட்டின் அருகே மற்றும் கார் பார்க்கிங் அருகே சோதனை நடத்தி விட்டு திரும்பி சென்றனர்.

பின்னர் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. அதேபோல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டிற்கு கீழ்ப்பாக்கம் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சென்று சோதனை நடத்தினர். அதில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து தேனாம்பேட்டை மற்றும் கீழ்ப்பாக்கம் போலீசார் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் செல்வப்பெருந்தகை வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர். இந்த சம்பத்தால் சிறிது நேரம் போயஸ் கார்டன் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.