விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜனுக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கும்விதமாக ராஜேந்திரபாலாஜி பேசியிருந்தார். முன்னதாக, விருதுநகரில் நடந்த நிகழ்ச்சி மேடையில் அதிமுக நிர்வாகியை ராஜேந்திரபாலாஜி அறைந்ததும் சர்ச்சைக்குள்ளானது. இதனையடுத்து, ராஜேந்திரபாலாஜியின் பேச்சை கண்டித்தும், மாபா பாண்டியராஜனுக்கு ஆதரவு தெரிவித்தும் கடந்த 10ம் தேதி விருதுநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மதுரையிலும் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக நேற்று முன்தினம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இச்சம்பவம் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், எம்ஜிஆர் கையில் சாட்டையுடன் இருப்பதுபோல், மாபா பாண்டியராஜனை கண்டிக்கும் வகையில் போஸ்டர்கள் விருதுநகர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘‘போராட்டத்தை தூண்டாதே... விருதுநகருக்கு டூரிஸ்ட் போல் வந்து சென்று நேரம் பார்த்து கட்சி தாவும் பாண்டியராஜனே... ஜாதி அரசியலை தூண்டாதே... அதிமுக எம்ஜிஆர் எனும் சிவன் சொத்து. இங்கே ஜாதி அரசியலுக்கு வேலை இல்லை. இங்கே அனைவரும் சமம். திருந்திக் கொள். இல்லை வன்மையாக திருத்தப்படுவாய். சாட்டை எடுத்து ஜாதி அரசியல் பண்ணும் பாண்டியராஜனே திருந்துங்கள். எச்சரிக்கிறோம் புலித்தேவன் எழுச்சிப்படை, விருதுநகர்’’ என இருந்தது.


