Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம் அமிர்தசரஸ் கோயிலுக்கு அருகே குண்டுவெடிப்பு

அமிர்தசரஸ்: பஞ்சாபில் அமிர்தசரஸ் கோயிலுக்கு வெளியே குண்டு வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் தாகூர் திவார் கோயில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த கோயில் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அங்கு தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டது.

இதில் இரண்டு மர்ம நபர்கள் பைக்கில் வருகின்றனர். கோயில் அருகில் வந்த நிலையில் பைக்கில் இருந்த ஒருவன் வெடிபொருளை கோயிலுக்குள் வீசியதும் இருவரும் தப்பிச்சென்றனர். குண்டு வெடித்து சிதறியதில் கோயில் சுற்றுச்சுவர் சேதமடைந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் குண்டு வெடிப்பு அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 4 மாதங்களாக அமிர்தசரஸ் மற்றும் குருதாஸ்பூரில் சோதனை சாவடி உள்ளிட்டவற்றை குறிவைத்து இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. எனினும் முதல் முறையாக கோயில் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமிர்தசரஸ் காவல் ஆணையர் குர்பிரீத் சிங் கூறுகையில்,``குண்டு வெடிப்பில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். முந்தைய சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டது போலவே இவர்களும் கண்டுபிடிக்கப்படுவார்கள். வெடிக்கப்பட்ட பொருளை அடையாளம் காண்பதற்காக தடயவியல் குழு சம்பவ இடத்தில் மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளது” என்றார்.

* சட்டம் ஒழுங்கு மோசம் எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஒன்றிய அமைச்சர் ரவ்னீத் சிங் தனது எக்ஸ் தள பதிவில்,``அமிர்தசரசின் கந்த்வாலாவில் துவாரா கோயிலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறேன். மீண்டும் மீண்டும் குண்டுவெடிப்புக்கள் நிகழாமல் தடுப்பதற்கு ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது. பஞ்சாபில் சட்டம், ஒழுங்கு மோசமடைவது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.இதேபோல் காங்கிரஸ் மாநில தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா மற்றும் அகாலி தளத்தின் மூத்த தலைவர் பிக்ரம் சிங் உள்ளிட்டோரும் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

* அரசுக்கு தொல்லை தருகிறார்கள்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங்மான் கூறுகையில்,``பஞ்சாபிற்கு தொல்லை தருவதற்காக அவ்வப்போது பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் அத்தகைய சக்திகளுக்கு எதிராக மாநில காவல்துறை சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டம், ஒழுங்கை பொறுத்தவரை பஞ்சாப் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. மாநிலத்தில் பரஸ்பர சகோதரத்துவமும் அமைதியும் பேணப்படும் ” என்றார்.