Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரான்ஸ் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கடந்த 1789ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள பஸ்தி என்ற சிறையை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து, மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர். இதன் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 14ம் தேதி பிரான்ஸ் தேசிய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, புதுச்சேரியில் 235வது பிரான்ஸ் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர் நினைவிடத்தில் முதல் மற்றும் 2ம் உலகப் போரின்போது உயிரிழந்த இந்திய மற்றும் பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

இதில் புதுச்சேரி, சென்னை பிரெஞ்ச் துணை தூதர் லிசே டல்போட் பரே, புதுவை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மற்றும் உள்துறை அதிகாரிகள், பிரெஞ்ச் தூதரக அதிகாரிகள் பங்கேற்று போர் வீரர் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதையொட்டி இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டு தேசியக்கொடிகள் ஒருசேர ஏற்றப்பட்டு, இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து, நேற்று மாலை பிரெஞ்ச் தூதரகத்தில் பிரான்ஸ் தேசிய தின விழா நடைபெற்றது. தூதரக நுழைவாயில் மற்றும் கடற்கரை சாலையில் நடந்த வண்ணமயமான விழாவில் வாணவேடிக்கை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.