சென்னை: முதுநிலை மருத்துவர்கள் படிப்பை முடித்த பிறகு கட்டாயம் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வந்தது. தற்போது அந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புகள், சர்வீஸ் கேண்டிடேட் மற்றும் நான் சர்வீஸ் கேண்டிடேட் என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு வருகிறது. சர்வீஸ் கேண்டிடேட் என்பவர்கள் அந்த மருத்துவ கல்லூரியிலேயே படித்து பணியாற்றுபவர்கள். நான் சர்வீஸ் கேண்டிடேட் என்பவர்கள் வெளியில் இருந்து படிக்க வருபவர்கள்.
இவ்வாறு வெளியில் இருந்து படிக்க வரும் நான் சர்வீஸ் கேண்டிடேட் மாணவர்கள், தங்களின் படிப்பை முடித்த பிறகு 2 ஆண்டுகாலம் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்று விதி வகுக்கப்பட்டிருந்தது. விருப்பம் இல்லாதோர் படித்ததற்கான கட்டணமாக ரூ.40 லட்சம் தமிழ்நாடு அரசுக்கு செலுத்த வேண்டும் என்று முன்பு விதி இருந்தது.
இந்நிலையில், முதுநிலை மருத்துவர்கள் படிப்பை முடித்த பிறகு 2 ஆண்டுகாலம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதியை தளர்த்தி தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் காலம் 2 ஆண்டுகள் என்பது ஓர் ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனையில் பணிபுரிய விருப்பம் இல்லாதோர் ரூ.40 லட்சத்துக்கு பதில் ரூ.20 லட்சம் செலுத்தினால் போதும் எனவும், பிஜி டிப்ளோமோ மாணவர்கள் 2 லட்சத்திற்கு பதில் ரூ.10 லட்சம் செலுத்தினால் போதும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.