புதுடெல்லி: மகா கும்பமேளா குறித்த பிரதமர் மோடியின் அறிக்கை குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப முயற்சித்தன. இதன் காரணமாக அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் மக்களவை துணை தலைவர் கவுரவ் கோகாய் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘எதிர்க்கட்சிகள் கும்பமேளா குறித்து பேச அனுமதித்து இருந்தால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு இருக்காது. ஆனால் அரசும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரும் பிடிவாதமாக இருந்தனர்.
பிரதமரும், அவரது அமைச்சர்கள் மட்டுமே பேசும் நாடாளுமன்றம் செயல்படும் நாடாளுமன்றம் இல்லை. நாடாளுமன்றம் இந்திய மக்களுக்கு சொந்தமானது. மேலும் அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை கூறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். கங்கை மீதான நமது பக்தியை பற்றி பேசுவதில் இருந்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமைதியாக்கப்படும் மற்றொரு நாள் இதுவாகும். இந்திய நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் செழுமையை பற்றி பேசுவதில் இருந்து அமைதியாக இருக்கிறேன். கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் இறந்த அனைவரையும் நினைவு கூர்ந்து அமைதியாக இருக்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.