Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக 3ம்தேதி (நாளை), 10ம் தேதிகளில் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இந்த பொங்கல் தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படவுள்ள நிலையில், டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோக பணியில் எவ்வித இடையூறுமின்றி குறிப்பிட்ட தினங்களுக்குள் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட வேண்டும் என்பதால் அனைத்து நியாயவிலை கடைகளும் விடுமுறை தினங்களில் இயங்க கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி ஜனவரி 3 (நாளை) மற்றும் 10ம் தேதிகளில் நியாய விலை கடைகள் செயல்படும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.  இந்த இரண்டு நாட்களை ஈடுசெய்யும் விதமாக 15.1.2025 (புதன்கிழமை) மற்றும் 22.2.2025 (சனிக்கிழமை) ஆகிய நாட்கள் நியாய விலைக் கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.