Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அக். 1க்கு பதில் அக்.5ம் தேதி வாக்குப்பதிவு அரியானா தேர்தல் தேதி மாற்றம்: காஷ்மீர் வாக்கு எண்ணிக்கையும் அக்.8க்கு ஒத்திவைப்பு

சண்டிகர்: அரியானா சட்டப்பேரவை தேர்தலை அக்டோபர் 1க்கு பதிலாக அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, அரியானாவில் அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாகவும், ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ம் தேதி நடத்தப்பட்டு முடிவு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தல் தேதியை ஒத்தி வைக்க வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது. தேர்தல் நடக்கும் அக்டோபர் 1ம் தேதியை ஒட்டி, 5 நாள் தொடர் விடுமுறை வருவதால் பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் வாக்கு சதவீதம் குறைய வாய்ப்பிருப்பதாக பாஜ தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. இதே போல, ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள அகில இந்திய பிஷ்னோய் மகாசபா தேசிய தலைவரும் தேர்தல் தேதியை மாற்றி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினார்.

பஞ்சாப், ராஜஸ்தான், அரியானாவில் பிஷ்னோய் சமூக மக்கள் பலர் உள்ளனர். இவர்களின் குரு ஜம்பேஷ்வரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பிகானேரில் திருவிழா நடத்தப்படும். அப்போது, அனைத்து பிஷ்னோய் சமூகத்தினரும் ராஜஸ்தானில் கூடுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா அக்டோபர் 2ம் தேதி நடப்பதால், தேர்தலை ஒத்திவைக்க வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், அரியானா மாநில தேர்தலை ஒத்திவைத்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, அரியானாவில் அக்டோபர் 1ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 5ம் தேதி வாக்குப்பதிவு மாற்றப்பட்டுள்ளது. அதே போல, அரியானா, ஜம்மு காஷ்மீர் இரு மாநிலத்திற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிஷ்னோய் சமூகத்தின் வாக்குரிமை மற்றும் மரபுகள் இரண்டையும் மதிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அவர்களின் குரு ஜம்பேஷ்வரின் நினைவாக 300-400 ஆண்டுகள் பழமையான நடைமுறையை நிலைநிறுத்தியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.