Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

என்னை இழிவு செய்வதாக நினைக்கும் அரசியல் முதிர்ச்சியற்றவர்களை கண்டு பரிதாபம் தான் வருகிறது: உதயநிதி ஸ்டாலின் பதிலடி

சென்னை: என்னை இழிவு செய்வதாக நினைக்கும் அரசியல் முதிர்ச்சியற்றவர்களை கண்டு பரிதாபம் தான் வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிலடி தெரிவித்துள்ளார். அண்மையில் திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தின்போது ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், சனாதன தர்மம் மீது எனக்கு அதிக அக்கறை உண்டு. தமிழ்நாட்டை சேர்ந்த இளம் அரசியல்வாதி ஒருவர் சனாதன தர்மம் ஒரு வைரஸ் என்றும் அதனை கூண்டோடு அழித்திட வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். இப்படி அவர் மாற்று மதத்தை சேர்ந்தவர்களைப் பற்றி பேச முடியுமா? இந்துகள் ஒற்றுமையாக இல்லாததே இதற்கு காரணம். அதனால்தான் பலர் நம் மீது ஏறி சவாரி செய்கிறார்கள் என்று பேசி கூறியிருந்தார்.

இதன் காரணமாக, உதயநிதி ஸ்டாலின், பவன் கல்யாண் ஆதரவாளர்கள் இடையே சமூக வலைதளங்களில் கருத்து மோதல்கள் நடந்தது. இந்நிலையில், ஆந்திராவில் உள்ள கோவிலில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வாசல் படிகளில் ஒட்டி அதனை கால் மிதியாக பயன்படுத்தி மிதித்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், அந்த வீடியோ காட்சியை பகிர்ந்து உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில்,

என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது!

கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.

தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் - பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.

அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் - மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.

என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்.

கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை, உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கழகத்தலைவர் வழியில் பகுத்தறிவு சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.