Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

போக்சோ இணைய முகப்பு, தனிநபர் பராமரிப்பு திட்ட செயலி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை: பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ போக்சோ இணைய முகப்பு, தனி நபர் பராமரிப்பு திட்ட செயலி, குழந்தை பராமரிப்பு இல்லங்களை ஆய்வு செய்வதற்கான செயலி, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான கைபேசி செயலியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை:

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போக்சோ சட்டத்தை அமல்படுத்துதல் தொடர்பாக நடந்த ஆய்வுக்கூட்டத்தில் போக்சோவுக்கு தனி இணையதளம் உருவாக்கும்படி அறிவுறுத்தினார்.

இதையடுத்து, சென்னை முகாம் அலுவலகத்தில், போக்சோ இணையதளம் https://www.pocsoportal.tn.gov.in தனி நபர் பராமரிப்பு திட்ட செயலியையும் குழந்தை பராமரிப்பு இல்லங்களை ஆய்வு செய்வதற்கான செயலியையும், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான கைபேசி செயலியையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

போக்சோ இணையதள முகப்பு மூலம், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளை காவல் துறை, போக்சோ நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை ஆகிய துறைகள், விவரங்களை உடனே பதிவு செய்ய முடியும். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டு தொகையை தாமதமின்றி, எவரையும் அணுகாமல், இணையதளம் மூலமாக நேரடியாக அவர்களது வங்கி கணக்கிற்கு செலுத்த முடியும். குழந்தை தொடர்பான விவரங்கள் எவருக்கும் தெரியாத வண்ணம் இணைய தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கிராமங்கள் மற்றும் நகர்ப்புரங்களில் வாழும் ஏழை, எளிய கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளியமுறையில் பெற, அவர்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களில், www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் விவரங்களை பதிவு செய்து, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராகலாம். இந்த வலைபயன்பாட்டின் வாயிலாக சமூகநலத் துறையின் திட்டங்கள், ஓய்வூதியம், தற்காலிக தங்கும் இடம், திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுய தொழில் செய்ய மானியம் கோன்ற உதவிகளை தேவைகளை விரைந்து பெற்றிட, வாரியத்தின் மூலம் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும்.