சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின்படி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் போக்சோ வழக்கு சம்பந்தமான பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிட்டனர். அதன்படி, நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை பெருநகர காவல், எழும்பூரில் உள்ள கிழக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் போக்சோ வழக்கு சம்பந்தமான பயிற்சி வகுப்பு நடந்தது.
நிகழ்ச்சியை சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ராதிகா தலைமையில், கிழக்கு மண்டல இணை ஆணையர் பண்டி கங்காதர் மற்றும் தெற்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையர் விஜயகுமார் முன்னிலையில் பயிற்சி நடந்தது. இப்பயிற்சி வகுப்புகளில் மொத்தம் 44 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இப்பயிற்சி வகுப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையர் வனிதா வரவேற்புரை மற்றும் நன்றியுரை வழங்கி சிறப்பித்தார். அடுத்த பயிற்சி வகுப்பு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது.


