வாத்தலகி (Platypus) நீர் சார்ந்து நிலத்தில் வாழும் உயிரினமாகும். தலையின் முன்பகுதியின் வடிவம் காரணமாக இதற்கு வாத்தலகி என்ற பெயர் வந்தது. இவை பாலூட்டிகளில் முட்டையிடும் ஒரே விலங்காகும். இதன் முன்தலை நுனி கொம்புப் பொருள்படிவு மூடிய அகன்ற அலகாக நீண்டு துருத்தியிருக்கும். ஆஸ்திரேலிய மற்றும் அதைச் சுற்றி உள்ள தீவுகளில் மட்டுமே இவை வாழ்கின்றன. இவை சிற்றாறுகளின் கரையோரமாக வசிக்கும். வாத்தலகி கரையில் வளை தோண்டி வசிக்கும். வளையிலிருந்து நீருக்குச் செல்லவும் ஒரு வாயில் இருக்கும். பெரும்பகுதி நேரத்தை நீரிலேயே கழிக்கும். இங்கே நீரின் அடித்தரையில் படிந்துள்ள மெல்லுடலிகள், புழுக்கள், பூச்சிகள் ஆகியவற்றைப் பிடித்துத் தின்னும். அடித்தளத்தில் இரை தேடுவதற்கு அதன் தனிவகைப்பட்ட அலகு அதற்கு உதவுகிறது.
வாத்தலகி உடலமைப்பு வாலுடன் சேர்ந்து சுமார் 43 செ.மீ முதல் 50 செ.மீ நீளம் வரை இருக்கும். இதன் பாதங்களில் நீந்து சவ்வுகள் அமைந்துள்ளன. இவற்றைப் பயன்படுத்தி மிக நன்றாக நீந்தும். அகன்ற தட்டை வால் சுக்கானாக உதவுகிறது. கரும்பழுப்பு மயிர்கள் மிக அடர்த்தியானவை. ஆதலால் தண்ணீர் அதன் உடாக உட்புகுவதில்லை. அது கரையேறும் பொழுது அதன் உடல் உலர்ந்திருக்கும். செவி மடல்கள் இவற்றிற்குக் கிடையாது. நீரில் மூழ்கும்போது அதன் செவித்துளைகள் அடைத்துக் கொள்கின்றன. இவற்றின் கைகளின் மணிக்கட்டுப் பகுதியில் ஒரு சிறிய கொடுக்கு இருக்கும். பொதுவாக இரண்டு பாலினத்திலும் இவை காணப்பட்டாலும் ஆண் வாத்தலகிகள் மட்டுமே விஷத்தைச் சுரக்கின்றன. இந்த விஷம் பல புரதங்களின் கலவையாக இருக்கிறது. சிறிய உயிரினங்களைக் கொல்ல வல்ல இந்த நஞ்சு மனிதனை மரணிக்கச் செய்வதில்லை. ஆனால் அதிகமான வலியை இவை ஏற்படுத்தும். இந்த வலியானது சில நாட்கள் தொடங்கி பல மாதங்கள் வரை நீடித்திருக்கும்.

