Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

8 கோடி மக்கள் இருக்கும் தமிழுக்கு பாரபட்சம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: 8 கோடி மக்கள் இருக்கும் தமிழுக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படுவது ஒன்றிய அரசின் பாரபட்சம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்து துறையில் முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து 2வது நாளாக சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்தரமோகன், தமிழக பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் சங்கர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் ஆர்த்தி மற்றும் துறைசார் இயக்குநர்கள் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் நிருபர்களிடம் பேசியதாவது: பள்ளிகளில் சாதி ரீதியான பிரச்னைகள் மற்றும் பாலியல் சார்ந்த குற்றங்களை தடுப்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்கள் 2,346 பேர் பணி நியமனம் அடுத்த மாதம் நிறைவடையும். குறைந்த நபர்கள் பேசக்கூடிய சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளனர்.

8 கோடி மக்கள் இருக்கும் தமிழுக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படுவது பாரபட்சமாகும். தமிழகத்துக்கு 2025-26ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு ரூ. 1,800 கோடி நிதி வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இதுவரை நிதி நிலுவையில் உள்ளது. அவர்கள் தேசிய கல்விக் கொள்கைக்கு கையெழுத்து போட்டால்தான் நிதி தருவோம் என கூறுகின்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்துவோம், நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.