Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோவில்பட்டியில் பயங்கரம் 2 பேர் வெட்டிக்கொலை: தொழில் போட்டியில் தீர்த்துக்கட்டிய 3 பேர் கைது

கோவில்பட்டி: கோவில்பட்டியில் தொழில் போட்டியில் 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் வெள்ளத்துரை (50). இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயில் அருகே மீன் கடை நடத்தி வந்தார். அந்த கடையில் மேலப்பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த மகாராஜா (எ) சாமி (55) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இருவரும் மீன் கடையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2 மணியளவில் இரண்டு பைக்குகளில் முகமூடி அணிந்த வந்த 3 பேர், கடைக்குள் புகுந்து வெள்ளத்துரை, சாமியை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. இதில் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில், இருவரையும் வெட்டி கொன்றது, கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 3வது தெருவைச் சேர்ந்த சேர்மக்கனி (32), மாரிராஜ் (32), கார்த்திக் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. கைதான கார்த்திக், வெள்ளத்துரையின் கடையில் இருந்து நான்கு கடைகள் தள்ளி மீன் கடை மற்றும் ஆட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் வியாபாரம் சுமாராக நடந்துள்ளது. ஆனால் வெள்ளத்துரையின் கடையில் வியாபாரம் படுஜோராக நடந்துள்ளது.

இதன் காரணமாகவே கார்த்திக் மற்றும் அவரது கடையில் வேலை பார்த்த சேர்மக்கனி, மாரிராஜ் ஆகியோர் சேர்ந்து வெள்ளத்துரையையும், சாமியையும் வெட்டிக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, மதுரையில் இருந்து அரசு பஸ்சில் தப்பிய கொலையாளிகளை நேற்று மதியம் 1 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பஸ்சை மடக்கி போலீசார் கைது செய்தனர்.