Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உச்சியில் இருப்பது தீபத்தூணா? அளவு கல்லா? திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறை திடீர் ஆய்வு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூணா? அளவு கல்லா? என தொல்லியல் துறையினர் மூன்று மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென ராம.ரவிக்குமார் என்பவர் ஐகோர்ட் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த விவகாரத்தில், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையர் கோயில் அருகே வழக்கம் போல தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது நில அளவைத்தூண் என்பது முந்தைய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால், உச்சியில் இருப்பது தீபத்தூணா? அளவு கல்லா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய தொல்லியல்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு தொல்லியல்துறை இணை இயக்குனர் யத்திஷ்குமார் தலைமையில் சென்னை மற்றும் மதுரையைச் சேர்ந்த தொல்லியல் துறையினர் 7 பேர் கொண்ட ஆய்வு குழுவினர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், மலைப்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை 8.45 மணி முதல் பகல் 11.45 மணி வரை ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு அறிக்கையை மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் தொல்லியல் துறையினர் ஒப்படைக்கவுள்ளனர். பிரிட்டிஷார் காலத்தில் நடப்பட்ட சர்வே தூணை, தீபத்தூண் எனக்கூறி சர்ச்சை கிளம்பி வருவதாக கூறும் நிலையில், தொல்லியல் துறையினர் சுமார் 3 மணி நேரம் மேற்கொண்ட ஆய்வு அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

* திருப்பரங்குன்றம் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை கலெக்டர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் திருப்பரங்குன்றம் தர்கா ஆகிய 3 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் நேற்று மிரட்டல் வந்துள்ளது. இந்த தகவல் உடனடியாக அந்தந்த பகுதி போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சென்றுதீவிர சோதனையில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தற்போது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சிக்கந்தர் தர்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெடிகுண்டு சோதனை நடத்தினர். மேலும் மலைக்கு கீழுள்ள பெரியரதவீதியில் உள்ள பள்ளிவாசலிலும் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.