டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்ட போது விமானி அறைக்குள் புகுந்த 2 பயணிகளால் பரபரப்பு: விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர்
புதுடெல்லி: டெல்லியில் இருந்து மும்பை செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம், டேக்-ஆப் செய்வதற்காக ஓடுதளத்தில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் இருந்த இரண்டு பயணிகள் திடீரென ரகளையில் ஈடுபட்டு, விமானியின் அறைக்குள் (காக்பிட்) வலுக்கட்டாயமாக நுழைய முயற்சித்தனர். இதனால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானப் பணிப்பெண்கள், சக பயணிகள் மற்றும் விமானத்தின் கேப்டன் ஆகியோர் பலமுறை கேட்டும், அவர்கள் தங்கள் இருக்கைக்குத் திரும்ப மறுத்துவிட்டனர்.
இவர்களின் இந்த அத்துமீறிய செயலால், ஓடுதளத்தில் இருந்து விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு செல்லப்பட்டது. பின்னர், ரகளையில் ஈடுபட்ட இரண்டு பயணிகளும் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டு, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால், சுமார் 7 மணி நேரம் தாமதமாக இரவு 7.21 மணிக்கு விமானம் புறப்பட்டது.