கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாளில் சமர்ப்பிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்துக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி த.வெ.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பொது சொத்துகள் சேதத்துக்கு இழப்பீடு வசூலிப்பது குறித்து விதிகள் வகுக்க தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இதையடுத்து, அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டி விதிமுறைகளை வகுக்க கோரி வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த அனைத்து வழக்குகளும், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜராகியிருந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், வழிகாட்டு விதிகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், விதிகளை வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அரசு கூறுவது அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பது ஆகாதா என்று கேட்டனர். அதற்கு, கூடுதல் அட்வகேட் ஜெனரல், எந்த கட்சியும் பொதுக்கூட்டம் நடத்துவதை தடுப்பதில்லை என்றார்.
இதை தொடர்ந்து, த.வெ.க தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தங்களையும் இணைக்க அனுமதிக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் கோரிக்கை விடுத்தார். த.வெ.க. தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, பிரசாரத்துக்கு ஒரு நாள் முன் அனுமதி வழங்கப்பட்டது. முன்கூட்டியே அனுமதி அளித்திருந்தால் இந்த அசம்பாவித சம்பவம் நடந்திருக்காது. கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தையும் அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், எல்லா கட்சிகளுக்கும் முன்கூட்டியே அனுமதி வழங்க வேண்டும். வழிகாட்டு விதிமுறைகள் வகுக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றனர்.
இதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், காவல்துறை, மாநகராட்சி, தீயணைப்பு துறை, மருத்துவ துறை உள்ளிட்டோர்களிடம் ஆலோசித்து தான் விதிமுறைகள் வகுக்க வேண்டும். இதற்கு தேவையான கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 10 நாளில் வழிகாட்டு விதிமுறைகளை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், நெடுஞ்சாலைகள் தவிர பிற அனுமதிக்கப்பட்ட இடங்களில் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதியளிக்க கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது. கூட்டங்களுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது குறித்த காலத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
