Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அறிவுறுத்தி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை பஸ் படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை: போலீசாருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது கல்வி நிறுவனங்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதன் படி 2024-25ம் கல்வியாண்டில் 23,49,616 பள்ளி மாணவர்களுக்கும் சுமார் 2 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் கட்டணமில்லா பயணத்திற்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசு பொதுப் பேருந்துகளில் மாணவர்கள் செல்லும்போது புத்தகப்பை மற்றும் உணவுப்பை கொண்டு செல்வதால் பேருந்தினுள் கூட்ட நெருக்கடியில் மிகவும் சிரமப்படுகிறார்கள். கூட்ட நெருக்கடியால் மாணவ, மாணவியர் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் காட்சிகளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காணலாம். சில நேரங்களில் விபத்துகளால் மாணவர்கள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.

எனவே, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்விதமாக நெருக்கடி மிகுந்த வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக தனிப்பேருந்துகளை இயக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர், ‘‘குழந்தைகளை அறிவுறுத்தி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.

பள்ளி பருவத்திலேயே புகைப்பழக்கம், மது, புகையிலை, கஞ்சா போன்ற பழக்கங்களுக்கு மாணவர்கள் ஆளாகி வருவது அதிகரித்து வருகிறது. மாணவியர் பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. சில மாணவர்கள் சாகசத்திலும் ஈடுபடுகின்றனர்.

கண்டக்டர் அறிவுறுத்தினாலும் மாணவர்கள் அதனை ஏற்பதில்லை. அது தண்டனைக்குரிய குற்றம். காவல்துறையினர் வழக்குப்பதிவு கூட செய்யலாம். மாணவர்கள் பேருந்திற்குள் இருப்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனையும் மீறி படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.