Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பற்களை பிடுங்கிய வழக்கு நெல்லை கோர்ட்டில் பல்வீர் சிங் ஆஜர்

நெல்லை: விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் இன்று நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் ஆஜரானார்.அம்பை சப்-டிவிஷனில் ஏஎஸ்பியாக பல்வீர்சிங் ஐபிஎஸ் 2023ல் பணியாற்றினார். அப்போது விசாரணைக்காக சென்றவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார். மாநில மனித உரிமை ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வீர்சிங் ஐபிஎஸ் அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் அவரது சஸ்பெண்ட் உத்தரவை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் கொடுங்குற்றம் புரிதல், கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல், ஆதாரத்தை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளிலும் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 14 போலீசார் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நெல்லை 1வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த 4 வழக்குகளும் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வாதாடிய மாடசாமி என்பவர் இந்த வழக்கை மனித உரிமை மீறல் வழக்காக கருதி, இந்த வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்து மனு அளித்தார். இந்த மனுவை நீதிபதி சத்யா பெற்றுக் கொண்டு சிபிசிஐடி போலீசாரிடம் இதுகுறித்து கேட்டார். ஆனால் சிபிசிஐடி போலீசார் மனித உரிமை வழக்கு குறித்து முன் கூட்டியே தெரிவிக்காததால், நீதிபதி சத்யா சிபிசிஐடி போலீசாரை கடிந்து கொண்டார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.