பாளை மகாராஜநகர் உழவர் சந்தையில் முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட முகப்பு வாயில் கேட்டை மீண்டும் திறக்க வேண்டும்
*கலெக்டரிடம் விவசாயிகள் மனு
நெல்லை : பாளை மகாராஜநகர் உழவர் சந்தையில் எந்தவித முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட முகப்பு வாயில் கேட்டை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க கோரி அங்கு வியாபாரம் செய்துவரும் விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.பாளை மகாராஜாநகர் உழவர் சந்தையில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்து வரும் வியாபாரிகள் நெல்லை கலெக்டரிடம் அளித்த மனுவில்:பாளை மகாராஜாநகர் உழவர் சந்தையில் சிவந்திபட்டி, முத்தூர், காடன்குளம், குத்துக்கல், கொடிகுளம், அகரம், செல்லூர், ராஜகோபாலபுரம், தோப்பூர், வல்லநாடு, பருத்திப்பாடு, மூலக்கரைப்பட்டி, பொன்னாக்குடி ஆகிய கிராமங்களில் உள்ள எங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, காய்கனிகளை தினமும் இங்கு கொண்டுவந்து விற்பனை செய்து வருகிறோம்.
இந்த காய்கறி விற்பனையை நம்பியே எங்கள் வாழ்வாதாரம் உள்ளது. மேலும் இந்த சந்தையானது கடந்த 24 ஆண்டுகளாக செயல்பட்டு வரும்நிலையில் இந்த சந்தையின் முகப்பு வாயில் கேட்டை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் உழவர் சந்தை நிர்வாகத்தினர் அடைத்துள்ளனர். இதனால் உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்கள், சந்தையை பூட்டி விட்டார்கள் என்று கருதி வீட்டுக்கு சென்று விடுகின்றனர். விவரம் தெரிந்த சிலர் மட்டும் ஒரு சிறிய சந்து வழியாக உழவர் சந்தைக்கு வருகின்றனர். இதனால் காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் உழவர் சந்தையை நிரந்தரமாக மூடி விடுவார்களோ என்ற சந்தேகமும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாளை மகாராஜாநகர் உழவர் சந்தை கேட்டை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளனர். மனு அளிக்கும் நிகழ்ச்சியில் விவசாயிகள் நம்பி, மாடசாமி, ராதிகா, லட்சுமி அம்மாள் மஜக மாநில துணைச் செயலாளர் அலிப் பிலால் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.