Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பஹல்காமில் 26 பேரை சுட்டுக்கொன்ற ‘டிஆர்எப்’-யை சர்வதேச தீவிரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா: இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

நியூயார்க்: பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான ‘டிஆர்எப்’-யை சர்வதேச தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது. இது இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி எனக் கூறப்படுகிறது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடத்தப்பட்ட கொடூரமான தீவிரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் கிளைப் பிரிவான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரன்ட்’ (டிஆர்எப்), இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பேசும்போது, ‘தீவிரவாதத்திற்கு எதிராக உலகம் சமரசமற்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். காஷ்மீரின் சுற்றுலாப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கவும், மதப் பிளவுகளைத் தூண்டவும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டன’ என்று அவர் கடுமையாகக் கண்டித்திருந்தார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்தது.

இந்தியாவின் தொடர் அழுத்தங்களுக்குப் பிறகு, தற்போது அமெரிக்கா முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரன்ட்’ என்ற அமைப்பு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு; அந்த அமைப்பினர் சர்வதேச தீவிரவாதிகள்’ என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்ட அறிக்கையில், ‘பஹல்காமில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகளை கொன்றதற்கு, டிஆர்எப் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதை அடுத்து, அந்த அமைப்பு சர்வதேச தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்படுகிறது.

தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும், பஹல்காம் தாக்குதலுக்கு நீதி கேட்டும் அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பைச் செயல்படுத்துவதிலும் அமெரிக்க நிர்வாகம் உறுதியாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த அறிவிப்பின் மூலம், டிஆர்எப் அமைப்புடனான அனைத்து விதமான தொடர்புகளும் சட்டவிரோதமாக்கப்பட்டு, அதன் சொத்துக்கள் முடக்கப்படும். இந்த நடவடிக்கையானது, சர்வதேச தீவிரவாத அமைப்புகளுக்கு விடுக்கப்பட்ட வலுவான எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.