வெளிமாநில பதிவெண் கொண்ட 547 பேருந்துகள் இன்று முதல் இயங்காது: ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு
சென்னை: வெளிமாநில பதிவெண் கொண்ட 547 பேருந்துகள் இன்று முதல் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988படி கனரக ஒப்பந்த வாகனங்களுக்கு ஆம்னி பேருந்துகள் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அனுமதி சீட்டை பெற்று கொண்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதனை முறையாக பயன்படுத்தாமல் சாதாரண பேருந்துகள் போல் பயணிகளை ஏற்றி இறக்குவதாக போக்குவரத்து துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மேற்கொண்ட சோதனையில் பல்வேறு பகுதியில் முறைகேடாக பேருந்துகளை இயக்குவதாக தெரிந்த அடிப்படையில் அதன் மூலமாக தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே, வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளாக மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே கேட்டிருந்தது. 6 மாதகாலத்திற்கு முன்பாகவே தமிழக போக்குவரத்துதுறை ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு கால அவகாசம் வழங்கி இருந்தது. எனினும் இதுவரை சுமார் 547பேருந்துகளை தமிழக பதிவெண்ணுக்கு மாற்றாமல் வெளிமாநில பதிவெண் கொண்ட பேரூந்துகளாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆம்னி பேருந்துகளை இன்று முதல் இயக்குவதற்கு தமிழகத்தில் போக்குவரத்து துறை முழுமையான தடை விதித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 547 வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளின் நிலை தற்போது கேள்வி குறியாகியுள்ளது. குறிப்பாக ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தில் அடுத்தகட்ட ஆலோசனை கூட்டம் மேற்கொள்ள உள்ளனர். அந்த ஆலோசனைக்கு பிறகு முடிவுகளை விரைவாக தெரிவிப்பதாகவும், அதன் பிறகு தமிழக அரசின் நடவடிக்கை எதிர்த்து தமிழக அரசிடம் கோரிக்கை முன்வைக்க இருப்பதாகவும். மேலும் மூன்று மாத காலத்திற்கு தங்களுக்கு காலநீட்டிப்பை தமிழக அரசு வழங்கினால் அதற்குள்ளாக தங்களின் பதிவெண்ணை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.