தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியது குறித்து எங்களது தலைவர்கள் பதில் அளிப்பார்கள்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியது குறித்து எங்களது தலைவர்கள் பதில் அளிப்பார்கள் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220வது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் அவரது திருவுருவ சிலைக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து எல்.முருகன் அளித்த பேட்டியில், தீரன் சின்னமலை வெள்ளையர்களை எதிர்த்து மிகப்பெரிய அளவில் போரிட்டு, வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். தமிழகத்தில் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டவர்கள் எண்ணற்றவர்கள். அதில் முக்கியமானவர் தீரன் சின்னமலை. இந்த சமூகத்திற்கு அவராற்றிய பணிகள் எண்ணில் அடங்காதது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியது குறித்து எங்களது தலைவர் மற்றும் தேசியத் தலைமை உள்ளிட்டோர் பதில் சொல்வார்கள் என்றார்.