Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் கனிமொழி தலைமையிலான குழு ரஷ்ய பயணத்தை நிறைவு செய்தது: ஸ்லோவேனியாவுக்கு புறப்பட்டது

மாஸ்கோ: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக சர்வதேச நாடுகளிடம் விளக்கம் அளிக்க அனைத்து கட்சி பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. இக்குழுவினர் பல்வேறு நாடுகளுக்கு சென்று, ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் செயல்பாடு குறித்தும் விளக்கம் அளிக்கின்றனர். அந்த வகையில், திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யாவுக்கு சென்றது. அங்கு நேற்று முன்தினம் ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் ஆன்ட்ரி ருடென்கோ, முன்னாள் பிரதமர் மிகைல் பிராட்கோ மற்றும் ரஷ்ய நாடாளுமன்ற அனைத்துக் கட்சி குழு உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கினர்.

இதைத் தொடர்ந்து கனிமொழி தலைமையிலான குழுவின் ரஷ்ய பயணம் நேற்றுடன் நிறைவடைந்தது. பயணத்தின் நிறைவாக கனிமொழி எம்பி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘ரஷ்யா, இந்தியாவின் நெருக்கமான நட்பு நாடு. இந்த கடினமான நேரத்தில் ரஷ்யா எங்கள் பக்கம் இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். பாகிஸ்தான் அரசின் தீவிரவாத ஆதரவால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை ரஷ்ய மக்கள் அறிந்துள்ளனர். எங்கள் நிலைப்பாட்டை விளக்க இதை ஒரு சிறந்த வாய்ப்பாக கருதுகிறோம்.

பாகிஸ்தான் தொடர்ந்து பொய்யான பிரசாரத்தை பரப்புகிறது. பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தொடர்ந்து எங்களை தாக்குவதால் எந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் வரமாட்டோம் என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது’’ என்றார். அனைத்து விதமான தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் சமரசமில்லாத ஒத்துழைப்புக்கு ரஷ்யா தீர்க்கமான உறுதிப்பாட்டுடன் இருப்பதாக அளித்துள்ளது. இந்திய குழுவினர் மாஸ்கோவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் அங்கிருந்து ஸ்லோவேனியாவுக்கு புறப்பட்டு சென்றனர்.