Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புலிவேந்துலா, ஒண்டிமிட்டாவில் இன்று இடைத்தேர்தல்; ஒய்எஸ்ஆர் காங். கட்சி எம்பி திடீர் கைது

திருமலை: புலிவேந்துலா, ஒண்டிமிட்டாவில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பியை போலீசார் இன்று அதிகாலை திடீரென கைது செய்தனர். ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன்ரெட்டியின் சொந்த தொகுதி புலிவேந்துலா மற்றும் ஒண்டிமிட்டாவில் ஜில்லா பரிஷத் இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 2 வார்டுகளிலும் 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு மொத்தம் 10,600 பேர் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த உள்ளனர். தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் லதாரெட்டி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஹேமந்த்ரெட்டி இடையே கடும் போட்டி உள்ளது. வாக்குச்சீட்டு முறையின் கீழ் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் இடைத்தேர்தல்கள் நடைபெறும் பகுதிகள் கடப்பா மக்களவை தொகுதியில் உள்ளதால் இந்த தொகுதியை சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பியான அவினாஷ்ரெட்டியை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். இதையறிந்த அக்கட்சியினர் அவரது வீட்டின் எதிரே திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். எம்பியை அழைத்து சென்ற வாகனம் எதிரே படுத்துக்கொண்டு செல்ல விடாமல் தடுத்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி அவினாஷ் ரெட்டியை அழைத்து சென்றனர். இடைத்தேர்தல் நடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்பி அவினாஷ் ரெட்டியை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.