Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மும்பையில் இருந்து கூரியர் மூலம் 1,200 போதை மாத்திரை வாங்கிய 3 வாலிபர்கள் கைது

*பவானியில் போலீசார் வளைத்து பிடித்தனர்

பவானி : மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இன்ஸ்டாகிராம் ஐடி மூலம் போலியான முகவரி, செல்போன் எண் கொடுத்து, வலி நிவாரணி மாத்திரைகளை கூரியர் மூலம் ஆர்டர் செய்து வாங்கப்படுவதாகவும், இம்மாத்திரைகள் அந்தியூர், பவானி மற்றும் சித்தோடு பகுதியில் கல்லூரி மாணவர்கள், கூலித் தொழிலாளர்களை குறி வைத்து போதைக்காக விற்பனை செய்யப்பட்டு வருவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில், போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பவானி கிழக்கு கண்ணார வீதியில் உள்ள கூரியர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையிலிருந்து இரு பார்சல்கள் வந்துள்ளது. இத்தகவல் போலீசாருக்கு கிடைத்த நிலையில் ரகசியமாக கூரியர் அலுவலகத்தை நேற்று கண்காணித்து வந்தனர்.

அப்போது, கூரியர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் மும்பையிலிருந்து வந்த பார்சலை பெற்றுச் செல்ல முயன்றார். இதைக் கண்ட போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்துப் பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், ஒரு பார்சல் மும்பையிலிருந்து வெறொரு முகவரிக்கு வந்துள்ளதால், அதை வாங்க வருபவர்களை பிடிக்க போலீசார் மாறுவேடத்தில் கூரியர் அலுவலகம் உள்ள பகுதியில் காத்திருந்தனர்.

அப்போது, பைக்கில் வந்த இரு வாலிபர்களில் ஒருவர், கூரியர் அலுவலகத்திற்கு சென்று பார்சலை கையெழுத்திட்டு வாங்கிச் செல்ல முயன்றார். அப்போது, அங்கு சென்ற போலீசார் வாலிபரை மடக்கி பிடித்தனர். பைக்கில் வந்த வாலிபர் இதை கண்டதும் தப்ப முயன்றபோது சுற்றிவளைத்த போலீசார், பைக் சாவியை எடுத்துக்கொண்டு கையும் களவுமாக பிடித்தனர். இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதில், வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக வாங்கியது பவானி, லட்சுமி நகர், காலிங்கராயன்பாளையம், வாய்க்கால் வீதியைச் சேர்ந்த ஹமீது மகன் தாமு (எ) தாமோதரன் (24), அந்தியூர், தவிட்டுப்பாளையம், வேங்கையன் வீதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் விக்னேஷ் (25), பவானியை அடுத்த பருவாச்சி, டீச்சர்ஸ் காலனியில் வசிக்கும், மதுரை மாவட்டம், கே.புதூர், அல் அமீன் நகரைச் சேர்ந்த அக்பர் அலி மகன் அப்துல் மாஷீத் (27) என்பது தெரியவந்தது.

இவர்கள், விற்பனைக்காக ஆர்டர் செய்து வாங்கிய 1,200 மாத்திரைகள் மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களை கைது செய்த பவானி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது சித்தோடு, அந்தியூர் போலீஸ் நிலையங்களில் போதை மாத்திரைகள் விற்பனை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.