Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்சியில் பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சிய பயங்கரம் போலீஸ் அதிகாரி வீட்டில் தஞ்சம் புகுந்த வாலிபர் சரமாரி வெட்டி படுகொலை: 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

திருச்சி: திருச்சியில் பட்டபகலில் போலீஸ் குடியிருப்பில் போலீஸ் அதிகாரி வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த வாலிபரை சரமாரி வெட்டி கொன்ற 5 பேர் கும்பலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி பீமநகர் கல்லாங்குளத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25). ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் சூபர்வைசராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சங்கீதா. தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் திருச்சி மார்சிங்பேட்டை பகுதியில் டூவீலரில் தாமரைசெல்வன் வந்துள்ளார். அப்போது, அவ்வழியாக 2 டூவீலர்களில் வந்த 5 பேர் கும்பல், தாமரைசெல்வன் மீது மோதினர். இதனால் அவர் நிலைதடுமாறி டூ வீலருடன் கீழே விழுந்தார்.

இதனையடுத்து அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாமரைச்செல்வனை சரமாரியாக வெட்டத்தொடங்கியது. இதனால் பதறிப்போன தாமரைச்செல்வன், அந்த கும்பலிடம் இருந்து உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பி ஓடினார். மர்ம நபர்கள் விடாமல் விரட்டி சென்றனர். மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்புக்குள் ரத்தம் சொட்டச்சொட்ட நுழைந்த தாமரைச்செல்வன், ஏதாவது ஒரு அதிகாரி வீட்டுக்குள் தஞ்சம் அடைந்தால் தன்னை எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் என கருதினார். இதனால் அந்த குடியிருப்பில் ஏ-பிளாக்கில் உள்ள சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் வீட்டுக்குள் நுழைந்து சமையலறையில் உள்ள கிரைண்டர் பகுதியில் பதுங்கி கொண்டார்.

தொடர்ந்து விரட்டி வந்த கும்பல், போலீஸ் அதிகாரி வீடு என்று கூட பார்க்காமல் உள்ளே புகுந்து, தடுக்க வந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டரையும் வெட்ட முயன்றது. சமையலறையில் பதுங்கியிருந்த தாமரைச்செல்வனை கண்டுபிடித்து அவரது தலை, கை, கால்களில் சரமாரியாக அந்த கும்பல் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனால் வீடு முழுவதும் ரத்தம் வழிந்து ஓடியது. இதனை பார்த்த போலீஸ் குடியிருப்பில் இருந்தவர்கள், அந்த கும்பலை விரட்ட முயன்றுள்ளனர்.

ஆத்திரமடைந்த கும்பல், அவர்களை நோக்கி அரிவாளை காட்டி மிரட்டியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றது. இந்த படுகொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி வடக்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் சிபின், நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் பாலக்கரை போலீசார், தாமரைச்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து, திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த சதீஷ், இளமாறன், பிரபாகரன், நந்து, கணேசன் ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில்,‘‘ கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தாமரைச்செல்வனுக்கு திருமணம் நடைபெற்றது. தாமரை செல்வனின் மனைவி ஒத்தக்கடை பகுதியில் உள்ள பெயின்ட் நிறுவனத்தில் கணினியில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது லால்குடியை சேர்ந்த சதீஷ் என்பவர் விற்பனை பிரதிநிதியாக இருந்தார். அவர் பெயின்ட் விற்பனை செய்ததில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிறுவனத்தில் கட்டாமல் இருந்ததால், அதை கேட்ட போது, தாமரை செல்வனின் மனைவியை தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கணவரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அவர் பெயின்ட் நிறுவனத்திற்கு வந்து சதீஷை திட்டியும் அடித்தும் உள்ளார். இது நடந்து ஒரு வருடம் ஆகிறது. சில தினங்களுக்கு முன்பும் தாமரைசெல்வனுக்கும், சதீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் தனது நண்பர்களுடன் வந்து கொலை செய்துள்ளது தெரியவந்தது,’’என்றனர். கொலையாளிகளிடம் இருந்து உயிர் தப்பிக்க போலீஸ் அதிகாரி வீட்டிற்குள் புகுந்த வாலிபர் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் நேற்று பட்டபகலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.