Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிய வாலிபருக்கு வாழ்நாள் சிறை: ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு

திருப்பத்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றினார். கடந்த பிப்ரவரி 7ம் தேதி சொந்த ஊர் செல்ல திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, கோவை வழியாக திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் மகளிர் பெட்டியில் பயணம் செய்தார்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே அந்த கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றபோது வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பினார். படுகாயம் அடைந்த அந்த பெண்ணுக்கு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டது. எனினும் நான்கு மாத சிசு வயிற்றிலேயே இறந்தது. பின்னர் பழைய குற்றவாளிகளின் படங்களில் இருந்து அந்த பெண் அடையாளம் காட்டிய கே.வி.குப்பம் தாலுகாவை சேர்ந்த கீழ் ஆலத்தூர் சின்னநாகல், பூஞ்சோலையை சேர்ந்த ஹேமராஜ் (27) என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மீனா குமாரி விசாரித்து ஹேமராஜுக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க கூடிய வகையில் சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும், குற்றவாளி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு தினமும் அரை மணி நேரம் மட்டுமே வெளியே அனுப்ப வேண்டும். மற்ற நேரம் அவர் சிறை அறையிலேயே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு தெற்கு ரயில்வே ரூ.50 லட்சம், தமிழக அரசு ரூ.50 லட்சம் என்று ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், அதை ஒரு மாத காலத்திற்குள் திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டார். இந்த சம்பவம் பிப்ரவரி மாதம் நடந்தது. குற்றவாளியை கைது செய்து 50 நாட்களிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 32 நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.