திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே சேர்த்தலா பள்ளிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சனுஷா (27). கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அருகில் உள்ள குத்தியதோடு பகுதியை சேர்ந்த தூரத்து உறவினரான 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த சிறுவன் பிளஸ் 1 படித்து வருகிறான். இந்த சந்திப்புக்கு பிறகு நெருக்கமான 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்து உள்ளனர். அதைத்தொடர்ந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு 2 பேரும் திடீரென மாயமானார்கள். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் குத்தியதோடு போலீசிலும், இளம்பெண்ணின் பெற்றோர் சேர்த்தலா போலீசிலும் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். 2 பேரும் தங்களது செல்போனை பயன்படுத்தாமல் இருந்ததால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று சனுஷா தனது உறவினருக்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பினார். இதுகுறித்து அறிந்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் 2 பேரும் கர்நாடக மாநிலம் கொல்லூரில் இருப்பது தெரியவந்தது.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் 2 பேரும் லாட்ஜில் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் பிடித்து சேர்த்தலாவுக்கு கொண்டு வந்தனர். விசாரணைக்குப் பின் போலீசார் சனுஷாவை சேர்த்தலா முதல் வகுப்பு குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி சனுஷாவை போலீசார் கொட்டாரக்கரை மகளிர் சிறையில் அடைத்தனர். மாணவனை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.