இன்ஸ்டாகிராமில் பழகி காதல் வலை; திருமண ஆசை காட்டி இளம்பெண் பலாத்காரம்: வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தத்தால் அம்பலம்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த விற்பனை பிரதிநிதியான இளம்ெபண் ஒருவர், கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் முகமது இஷாக் (30) என்பவருடன் பழகத் தொடங்கியுள்ளார். தொலைபேசி மற்றும் குறுஞ்செய்திகள் வழியே இருவரும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக முகமது இஷாக் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பிய இளம்ெ்பண்ணை பலமுறை நகரிலுள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முகமது இஷாக்கிற்கு வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை அறிந்த அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, இதுகுறித்து இஷாக்கிடம் கேட்டபோது, அவர் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் எச்.எஸ்.ஆர். லேஅவுட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றம் நடந்த இடம் அமிர்தஹள்ளி என்பதால், வழக்கு அங்கு மாற்றப்பட்டது. புகாரின் பேரில், இஷாக் மீது கிரிமினல் மிரட்டல், அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அவமதித்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகாத வகையிலான உடலுறவு ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
