Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இளம் தலைமுறையின் கனவுகள் நனவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இளம் தலைமுறையின் கனவுகள் நனவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் விடியலுக்காக, இளைஞர்களால் உருவான பேரியக்கம் திமுக. இந்திய வரலாற்றிலேயே இளைஞர் அணியை உருவாக்கிய முதல் அரசியல் இயக்கமும் திமுக தான்.

இளைஞர்களால் உருவாகி, இளைஞர்களோடு பயணித்து, எதிர்கால இளம் சமுதாயம் கல்வி-வேலைவாய்ப்பு-பொருளாதார சமநிலை பெற தொடர்ந்து போராடும் பேரியக்கத்தின், இளைஞர் அணிச் செயலாளர் என்ற முறையில், தமிழ்நாட்டின் நாளைய தலைவர்கள் அனைவருக்கும் சர்வதேச இளைஞர் தினம் வாழ்த்துகள். இளம் தலைமுறையின் கனவுகள் நனவாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிடமாடல் அரசு என்றும் துணை நிற்கும். எதிர்காலம் நமக்கானது. உயர்ந்த கனவுகளோடு, அயராது உழைப்போம்.

இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேலும், ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது: நாளைய உலகத்தை மாற்றப்போகும் திறமைமிக்க தமிழ்நாட்டு இளைஞர்களை உலகமே உற்று கவனிக்கிறது. தமிழ்நாட்டின் இளைய சமுதாயம் உலகை வெல்ல தயார் நிலையில் உள்ளது. விழுப்புரம் இளைஞனின் வியாபார முன்னேற்றம், கோவை இளம்பெண் இஸ்ரோ வரை பணிக்கு சென்றது; மதுரை இளைஞன் ஜெர்மனி சென்று வாழ்க்கையில் உயர்ந்தது.

தமிழ்நாட்டு இளைஞர்களோட லட்சியத்தையும், கனவையும் திராவிட மாடல் அரசு நிறைவேற்றி கொண்டே இருக்கிறது. கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கல்வியோட சேர்த்து, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்து கொடுத்துள்ளது. குறிப்பாக, நான் முதல்வன் முதல் ஸ்டார்ட் ஆப் டிஎன் வரை, புதுமைப்பென் முதல் தமிழ் புதல்வன் திட்டங்கள் வரை, திராவிட மாடல் அரசு இளைஞர்கள் நலனுக்கான அரசு.

ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ தகவல்படி, இந்தியா முழுவதும் உள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 8% நிறுவனங்கள், அதாவது 11 ஆயிரத்துக்கும் அதிமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 11 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 8500க்கும் அதிகமான நிறுவனங்கள் கடந்த 4ஆண்டு திமுக ஆட்சியில் உருவானவை.

இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தமிழ்நாட்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தலைமை ஏற்று நடத்துவது பெண்கள் தான். இதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாடு ஒரு முன்னோடியான சாம்பியன் மாநிலமாக திகழ்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 272 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் 63 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.

இது மட்டுமல்லாமல் 41 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் 1 லட்சத்துக்கு மேற்பட்ட விரிவுரையாளர்களுக்கும் நான் முதல்வன் திட்டம் மூலமாக திறன்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து உலகையே வெல்லக் கூடிய வகையில் அவர்களை தயார்படுத்தி வருகிறது நம் திராவிட மாடல் அரசு. இவ்வாறு அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.