தண்டராம்பட்டு : திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணையானது 119 அடி நீர்மட்டம் கொண்டது. இந்த அணையின் பாசனத்தை நம்பி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெறுகிறது.
மேலும், 3 மாவட்டங்களிலும் 88 ஏரிகள் மற்றும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் ஆகியவை சாத்தனூர் அணையை நம்பியே உள்ளன.
இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கும் முன்பே சாத்தனூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. மேலும், கிருஷ்ணகிரி அணை முழு கொள்ளளவை எட்டியதால் அதில் இருந்து திறக்கப்படும் உபரிநீரால் சாத்தனூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து இருந்தது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி தேவைக்கேற்ப உபரிநீரானது தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு, ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வந்தது. இதற்கிடையில் சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் நேற்று 116.40 அடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதனால் சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க ஏராளமான மக்கள் திரண்டனர். அங்குள்ள ஆதாம் ஏவாள் பூங்கா, தொங்கு பாலம், அறிவியல் பார்க், ராக்கெட் பார்க், முதலை பண்ணை, மீன் கண்காட்சி, முயல் பண்ணை, பறவைகள் கூண்டு, 9 கண் மதகு மற்றும் 11 கண் மதகு பகுதிகளை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். இதனால் மீன் விற்பனையும் அதிகரித்தது.


