திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த மே மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை 3 மாதங்களுக்கு மேலாகியும் தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு ஆகிய வட மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்த வருடம் கேரளாவிலேயே கண்ணூர் மாவட்டத்தில் தான் தென்மேற்கு பருவமழை மிக அதிகமாக பெய்து உள்ளது.
இந்தநிலையில் இன்று 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் நேற்று இரவு முதலே பலத்த மழை பெய்து வருகிறது.