வுஹான்: சீனாவின் வுஹானில் நடந்து வரும் வுஹான் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் அரை இறுதியில் நேற்று, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினியை, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா மோதினர். முதல் இரு செட்களை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட் போட்டி விறுவிறுப்பாக நடந்தது. டைபிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை பெகுலா வசப்படுத்தினார். அதனால், 2-6, 6-4, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்ற அவர் இறுதிப் போட்டியில் கோகோ காஃப் உடன் மோதுகிறார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஜோகோவிச் செமிபைனலில் தோல்வி; ஷாங்காய்: ஷாங்காய் மாஸ்டர் ஆடவர் டென்னிஸ் அரை இறுதிப் போட்டி ஒன்றில் செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் (38), மோனிகாஸ்க் வீரர் வாலன்டின் வஷரோட்டிடம் 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். மற்றொரு அரையிறுதியில் ரஷ்யாவின் டேனியில் மெத்வதேவை, பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரின்டர்நெக், 4-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். அதையடுத்து, இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் ஆர்தர், வாலன்டின் மோதவுள்ளனர்.
ஆனந்தை வீழ்த்திய காஸ்பரோ;
செயின்ட் லூயிஸ்: கிளட்ச் செஸ் லெஜண்ட்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்யாவின் முன்னாள் உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோ மோதினர். நேற்று நடந்த 10வது போட்டியில் வெற்றி பெற்ற காஸ்பரோ, லெஜண்ட்ஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். அதன் பின், சம்பிரதாயமாக நடந்த 2 பிளிட்ஸ் போட்டிகளில் ஆனந்த் ஆறுதல் வெற்றிகளை பெற்றார். ஒட்டு மொத்தத்தில், 13-11 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியில் வென்ற காஸ்பரோவுக்கு, ரூ.68 லட்சமும், ஆனந்துக்கு, ரூ.58 லட்சமும் பரிசாக கிடைத்தது.