Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யு-17 உலக கால்பந்து திக்... திக்... திரில்லரில் போர்ச்சுகல் சாம்பியன்

தோஹா: யு-17 உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரியாவை வீழ்த்தி, போர்ச்சுகல் இளையோர் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. கத்தாரின் தோஹா நகரில் 17 வயதுக்கு உட்பட்டோர் மோதும், இளையோர் உலக கால்பந்தாட்ட போட்டிகள் நடந்து வந்தன. இதில் 48 அணிகள் மோதின. முதல் 3 இடங்களை ஐரோப்பாவை சேர்ந்த நாடுகள் பிடித்தன.

இந்நிலையில், தோஹா நகரில் நடந்த இறுதிப் போட்டியில் போர்ச்சுகல் - ஆஸ்திரியா அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடிய போர்ச்சுகல் அணி வீரர்கள் கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். போட்டியின் 32வது நிமிடத்தில் அந்த அணியின் அனிஸியோ கேப்ரால் அட்டகாசமாக ஆடி கோல் அடித்து தனது அணியை முன்னிலைப் படுத்தினார். இந்த தொடரில் அவர் போடும் 7வது கோலாக அது அமைந்தது.

அதன் பின், இரு அணி வீரர்கள் எவ்வளவு முயன்றபோதும் கோல் போட முடியவில்லை. அதனால், 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஃபிபா யு-17 கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் போர்ச்சுகல் அணி வெல்லும் முதல் பட்டம் இது. முன்னதாக 3ம் இடத்துக்கு நடந்த போட்டியில் இத்தாலி - பிரேசில் அணிகள் மோதின.

கடைசி வரை எந்த அணியும் கோல் போடாததால், பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட இத்தாலி அணி, 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடி 3ம் இடத்தை பிடித்தது. அந்த அணியின் கோல் கீப்பர் அலெசாண்ட்ரோ லோங்கோனி, 2 கோல்களை அற்புதமாக தடுத்ததால் இந்த வெற்றி சாத்தியப்பட்டது.