Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலக உணவு திட்டம், ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு அமைப்பு கூறுவது போல் தாங்கள் நிவாரண பொருட்களை தடுப்பது இல்லை: இஸ்ரேல் அரசு

இஸ்ரேல் : உலக உணவு திட்டம், ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு அமைப்பு கூறுவது போல் தாங்கள் நிவாரண பொருட்களை தடுப்பது இல்லை என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரக்கூடிய நிலையில் காசாவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பசி, பட்டினியால் பாதிக்கப்பட்டு தவிப்பதால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாலஸ்தீனத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கும் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி நடத்திய தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதை அடுத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலில் இதுவரை 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. மேலும் காசாவில் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 90 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இருந்துள்ளதாக தெரிவிக்கின்றன. உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர் உள்ளிட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காசாவில் மட்டும் 5 லட்சத்து 14 ஆயிரம் பேர் உணவு பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், சில நகரங்களில் பசி, பட்டினியால் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது தெரியவந்துள்ளது. ஒரு புறம் காசா மற்றும் மேற்கு கரை மீதான தாக்குதல்கள் மறுபுறம் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தடுத்து நிறுத்துவதால் ஏராளமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்து வருகின்றனர். பசி, பட்டினியால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன குழந்தைகள் திறந்த வெளியில் உணவுக்காக திரண்டு பாத்திரங்களுடன் கையேந்தும் காட்சிகள் காண்போர் நெஞ்சை பிழிவதாக உள்ளது.

காசாவுக்கான உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களின் அளவை அதிகரிக்க வேண்டும் என்றும் எந்த இடையூறும் இன்றி பொதுமக்களுக்கு விநியோகிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் ராணுவத்திற்கு உலக உணவு திட்டத்தின் செயல் இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும் உலக உணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு அமைப்பு கூறுவது போல் தாங்கள் நிவாரண பொருட்களை தடுப்பது இல்லை என்றும் அந்த அமைப்புகள் முன்வைத்த குற்றசாட்டுகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் தொடர் தடைகளால் தொடர் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.