Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுகவுக்கு மாற்று, மாற்றம் என்றவர்கள் மறைந்தார்கள்: திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

கரூர்: திமுக சார்பில் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான முப்பெரும் விழா இன்று (17ம் தேதி) கரூர் கோடங்கிப்பட்டியில் நடைபெற்று வருகிறது.

இதில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; சென்னை ராபின்சன் பூங்காவில் திமுகவை தொடங்கியபோதும் மழை கொட்டியது. கொட்டும் மழையிலும் தொடங்கி வைக்கப்பட்ட கழகம் 75 ஆண்டுகளை அல்ல, நூற்றாண்டை காணப் போகிறது.  கொட்டும் மழையிலும் உங்களின் எழுச்சியை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது.  இது கரூர் அல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊர் இது.

பொதுக்கூட்டம் என்று கூறிவிட்டு மாபெரும் எழுச்சி மாநாட்டையே ஏற்பாடு செய்துள்ளார் செந்தில் பாலாஜி. மேற்கு மண்டலத்தில் திமுகவின் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் செந்தில் பாலாஜி. வெளியே இருந்தால் தூங்க முடியாது என்று சிலர் செந்தில்பாலாஜியை முடக்க பார்த்தனர். தான் எடுத்த பணியை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவார் செந்தில் பாலாஜி. கோடு போடச் சொன்னால் செந்தில் பாலாஜி ரோடு போட்டுள்ளார்

14 வயதில் கருப்பு, சிவப்பு கொடி பிடித்து கழகத்துக்காக உழைக்க தொடங்கினேன். ஓயாமல் உழைக்கின்ற தொண்டர்களை சந்திக்கும் போது எனக்கு புது எனர்ஜி வந்துவிடும். நாடே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கி என்னை முதலமைச்சராக்கியது நீங்கள்தான். நாம் அடுத்து செல்லக் கூடிய பாதையை வெற்றிப் பாதையாக செப்பனிட முப்பெரும் விழாவில் கூடியிருக்கிறோம். கொள்கைகளை கூர் தீட்டும் விழாவாக முப்பெரும் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பார்த்தால் கனிமொழி, நாடாளுமன்றத்தில் பேசினால் கர்ஜனை மொழி. கனிமொழி மட்டுமல்ல, விருது பெற்ற ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதத்திலும் பெருமைக்குரியவர்கள். எதிரிகளை கலங்கடிக்கும் வகையில் வெற்றி பெற்று வந்துள்ளோம். பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நின்று உண்மையாக உழைக்கின்றோம். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம் அமையும். 2019 முதல் நாம் எதிர்கொண்ட எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்திருக்கிறது திமுக

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்கிறது காவிக் கொள்கை. காவிக் கொள்கையின் அரசியல் முகம் பாஜக. அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜகதான் என்று உண்மையை பேசியுள்ளார். பாஜகவின் கைப்பாவை ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்ததால் திமுக அரசு மீது வன்மத்துடன் செயல்படுகிறது ஒன்றிய அரசு. எந்த மிரட்டலுக்கும் திமுக அஞ்சாது.

திமுகவுக்கு மாற்று தாங்கள்தான் என்று சிலர் பேசுகிறார்கள்; அவர்கள் பேசும் மாற்றம் என்ன? தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி இழுத்துச் செல்லப் போகிறார்களா? திமுகவுக்கு மாற்று, மாற்று என்று சொன்னவர்கள் எல்லாம் மறைந்து போய்விட்டார்கள். நாட்டிலேயே பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்ததால் சிலருக்கு வயிற்றெரிச்சல். வயிற்றெரிச்சலால் அவர்கள் பேசுவது ஆட்டுக்காக ஓநாய் கண்ணீர் வடிப்பது போன்றது.

ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாத எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டார். திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதிமுகவின் தலைமை பொறுப்பில் பழனிசாமி உள்ளார். அண்ணாயிசமாக இருந்த அதிமுக கொள்கையை அடிமையிசமாக மாற்றி அமித்ஷாவிடம் சரணடைந்துவிட்டார் எடப்பாடி. அமித் ஷா காலிலேயே விழுந்த பிறகு முகத்தை மறைக்க கைக்குட்டை எதற்கு என எல்லோரும் கேட்கிறார்கள். முழுவதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று எல்லோரும் கேட்கிறார்கள்.

பாஜக அரசின் மக்கள் விரோத செயல்கள் அனைத்தையும் நேருக்கு நேர் எதிர்கிறோம். ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக போராடி, போராடி தமிழ்நாட்டை தலைநிமிர வைத்துள்ளோம். திமுக ஆட்சியால் தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம். அனைத்தையும் கொடுத்த தமிழ்நாட்டை காக்கும் பொறுப்பும் கடமையும் திமுகவுக்குத்தான் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எனும் மாண்பை மறந்து எடப்பாடி தொடர்ந்து ஒருமையில் பேசி வருகிறார். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் நமது வாக்குரிமையை பறிக்கிறார்கள். அன்று முதல் இன்று வரை அடக்குமுறைக்கும், ஆதிக்கத்துக்கும், இந்தி திணிப்புக்கும், தமிழ்நாட்டில் நோ என்ட்ரிதான். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.