ஆம்பூர்: ஆம்பூர் அருகே செங்கல் சூளையில் பணிபுரிந்து வரும் கூலி தொழிலாளிக்கு ரூ 2.76 கோடி வரி மோசடியில் ஈடுபட்டதாக கூறி நோட்டீஸ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி விநாயகபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). செங்கல் சூளை கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் செங்கல்பட்டில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வந்தது.
அதில்,ராஜ்குமார் சென்னை பல்லாவரத்தில் ஏ.எம்.ஆர் டிரேடர்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தி வந்ததாகவும், அதன் மூலம் ரூ.2 கோடியே 76 லட்சத்து 82,898 வரி மோசடியில் ஈடுபட்டுள்ளதாவும், எனவே உடனடியாக ஆஜராகி அந்த பணத்தை செலுத்த வேண்டும் எனக்கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், உடனடியாக நேற்றுமுன்தினம் இரவு உம்ராபாத் போலீசில் புகார் செய்தார்.
திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், `ஆதார் மற்றும் பான்கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி யாரோ மர்மநபர்கள் எனது பெயரில் போலி நிறுவனத்தை நடத்தி ரூ.2.7 கோடிக்கு வரி மோசடி செய்துள்ளனர். தற்போது எனது பெயருக்கு ஜிஎஸ்டி அலுவலகம் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார்.
 
  
  
  
   
