கொழும்பு: மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நேற்று, இங்கிலாந்து அணிக்கு எதிராக, 254 ரன் இலக்குடன் ஆடிய இலங்கை அணி, 27 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 109 ரன்னுடன் தடுமாறிக் கொண்டிருந்தது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஒரு நாள் தொடரின் 12வது ஆட்டம் கொழும்பு நகரில் நேற்று நடந்தது. அதில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீராங்கனைகள் அமி ஜோன்ஸ் 11 ரன்னிலும், டேமி பியுமான்ட் 32 ரன்னிலும் வீழ்ந்தனர். பின்னர் வந்த ஹீதர் நைட் 29ல் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய கேப்டன் நாட் சிவர்பிரன்ட் அட்டகாசமாக ஆடி 117 பந்துகளில் 117 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
அதன் பின் வந்தோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், இங்கிலாந்து, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 253 ரன் எடுத்தது. அதையடுத்து, 254 ரன் இலக்குடன் இலங்கை களமிறங்கியது. துவக்க வீராங்கனைகளில் ஒருவரான கேப்டன் சமாரி அத்தப்பட்டு 14 ரன்னில், காயத்துடன் வெளியேறினார். பின் வந்த விஸ்மி குணரத்னே 10, மற்றொரு துவக்க வீராங்கனை ஹாசினி பெரேரா 35, ஹர்ஷிதா சமரவிக்ரமா 33, கவிஷா தில்ஹாரி 4 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இலங்கை அணி, 27 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 109 ரன்னுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.