மகளிர், மாணவியர் தங்கும் விடுதிகளுக்கு சொத்துவரி விதித்த உத்தரவுகள் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்களுக்கான தங்கும் விடுதிகளுக்கு வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரியை செலுத்தக் கூறி சென்னை, கோவை மாநகராட்சிகளின் சார்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி மகளிர் விடுதிகளின் உரிமையாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் அபர்ணா நந்தகுமார், மகளிர் தங்கும் விடுதிகளுக்கு வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரியை விதித்தால் அதை விடுதியில் தங்குவோரிடம் தான் வசூலிக்க வேண்டியிருக்கும் என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் நிலையில் இல்லாதவர்கள் தான் விடுதிகளில் தங்குகின்றனர். அதனால், இந்த விடுதிகளை குடியிருப்பு கட்டிடங்கள் தானே தவிர வணிக கட்டிடங்களாக கருத முடியாது எனக் கூறி வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரியை செலுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த விடுதிகளுக்கு குடியிருப்புக் கட்டிடங்களுக்கான வரியை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
