புதிதாக விண்ணப்பித்தோருக்கு வரும் டிச.15 முதல் உரிமைத்தொகை: சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
சென்னை: புதிதாக விண்ணப்பித்த தகுதியான மகளிருக்கு டிச.15 முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மகளிர் உரிமைத் தொகை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை;
2023 செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறோம். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மகளிர் பயனடைந்துள்ளனர். இதுவரை ரூ.30 ஆயிரம் கோடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மகளிரும் இந்த திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.26 ஆயிரம் பெற்றுள்ளனர்.
மேலும் சில பெண்கள் பயனடைவதற்காக மகளிர் உரிமைத்தொகை திட்ட விதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தளர்த்தியுள்ளார். தளர்த்தப்பட்ட விதிகளின்படி, அரசு மானியத்தில் 4 சக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கும் இனி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். அதேபோல, முதியோர் உதவித்தொகை பெறுபவர்களில் தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும்.
மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான பணிகளை வருவாய்த்துறை மேற்கொண்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகைக்காக 28 லட்சம் பெண்கள் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த 28 லட்சம் பேரில், தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.