சிகிச்சை செலவு அமெரிக்காவில் ரூ.1.7 லட்சம்: இந்தியாவில் வெறும் ரூ.50 தான்: மருத்துவத் துறையை புகழ்ந்த பெண்
புதுடெல்லி: அமெரிக்காவில் பல்லாயிரம் ரூபாய் செலவாகும் சிகிச்சைக்கு இந்தியாவில் வெறும் 50 ரூபாய் மட்டுமே ஆனதைக் கண்டு வியந்த அமெரிக்கப் பெண், இந்திய மருத்துவத் துறை பாராட்டியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு முதல் டெல்லியில் வசித்து வரும் கிரிஸ்டன் ஃபிஷர் என்ற அமெரிக்கப் பெண், தனது கட்டைவிரலில் ஏற்பட்ட காயத்திற்கு உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் அதிக செலவு மற்றும் தாமதமாகும் மருத்துவ முறைகளை, இந்தியாவின் மலிவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய மருத்துவ சேவையுடன் ஒப்பிட்டு அவர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து கிரிஸ்டன் ஃபிஷர் கூறுகையில், ‘இந்தியாவில் 50 ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு சிகிச்சைக்கு, அமெரிக்காவில் 1.7 லட்சம் ரூபாய் செலவாகும்.
இந்தியாவில் சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எனது கட்டைவிரலில் ஏற்பட்ட காயத்திற்கு அவசர சிகிச்சை பிரிவில் ஒரு கட்டுப்போட வெறும் 50 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் இதேபோன்ற சிறிய காயத்திற்கு அவசர சிகிச்சை பெற குறைந்தபட்சம் 2,000 டாலர், அதாவது சுமார் 1.7 லட்சம் ரூபாய் செலவாகும். மருத்துவமனைக்கு சென்ற 45 நிமிடங்களிலேயே எனக்கு முழு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மருத்துவர்களை சந்திக்க சிறிது நேரம் கூட காத்திருக்கவில்லை’ என்றார். இந்தியாவில் மருத்துவ செலவுகள் குறைவாக இருப்பதாலும், திறமையான மருத்துவர்கள் இருப்பதாலும், மருத்துவ சுற்றுலாத் துறை அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து மக்கள் சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வருவது குறிப்பிடத்தக்கது.