திருவள்ளூர்: மாமனார், மாமியார் சித்ரவதை செய்ததாக கடிதம் எழுதிவைத்துவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி ஜார்ஜ் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (38). இவரது மனைவி மஞ்சுளா (37). இவர்கள் காதலித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தனர்.இவர்களுக்கு குழந்தை இல்லை என்று தெரிகிறது. கடந்த மே மாதம் 15ம் தேதி ஸ்டீபன் ராஜ் மாரடைப்பால் இறந்து விட்டார். இதன்பிறகு கணவர் வீட்டில் மஞ்சுளாவுக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர். மேலும் ஸ்டீபன் ராஜ் சாவுக்கு மஞ்சுளாதான் காரணம் என்று கூறி கணவர் குடும்பத்தினர் சித்ரவதை செய்து வந்துள்ளனர். இதன்காரணமாக கடும் மன உளைச்சலில் மஞ்சுளா இருந்துள்ளார்.
இந்தநிலையில், வீட்டின் ஹாலில் மஞ்சுளா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரூக் சென்று மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்குபதிவு செய்து விசாரித்தார். இதனிடையே வீட்டில் மஞ்சுளா எழுதிவைத்திருந்த கடிதம் கிடைத்துள்ளது. அதில், ‘’தனது தற்கொலைக்கு மாமனார் ராயப்பா, மாமியார் மேரி, நாத்தனார் ராணி மற்றும் பால்ராஜ், அருண், ஆல்வின், குளோரி ஆகியோர்தான் காரணம். எனவே, அவர்கள் 7 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று எழுதிவைத்துள்ளார். இதன் அடிப்படையில், ராணி, பால்ராஜ் மற்றும் ஆல்வின் ஆகியோரிடம் விசாரணை நடத்துகின்றனர்.