திண்டிவனம்: ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் பஸ் ஜன்னல் வழியாக குதித்த பெண் தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் மகள் அருணா(32), இவர் பி.சி.ஏ பட்டதாரி. ஷேர் மார்க்கெட்டில் அதிக ஈடுபாடு இருந்ததால் அதில் அதிக பணத்தை முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆறு மாதமாக மன அழுத்தத்தில் இருந்தார்.
இந்நிலையில் அருணாவும் அவரது அம்மாவும் நேற்று முன்தினம் இரவு திருநாகேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு மூத்த மகளான ரமா(35) வீட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக கிளாம்பாக்கத்தில் இருந்து தனியார் சொகுசு பேருந்தில் வந்தனர். அப்போது திண்டிவனம் அருகே கூச்சிகொளத்தூர் பகுதியில் பேருந்து சென்றபோது ஓட்டுநரின் பின்புற இருக்கைக்கு அருகே இருந்த ஜன்னல் வழியே அருணா கீழே குதித்துள்ளார்.
இதில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.