Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைத்ததை தொடர்ந்து செல்போன், சிசிடிவி ஹேக் டிஎஸ்பியிடம் ராமதாஸ் புகார்: அன்புமணி மீது மீண்டும் குற்றச்சாட்டு

திண்டிவனம்: தைலாபுரம் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைத்ததை தொடர்ந்து செல்போன், சிசிடிவி ஹேக் செய்யப்பட்டதாக டிஎஸ்பியிடம் ராமதாஸ் புகார் அளித்து உள்ளார். இந்த விவகாரத்திலும் அன்புமணி மீது குற்றம்சாட்டி உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் 7 மாதங்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. இந்த சூழலில், ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் வீட்டில் அவர் அமரும் இருக்கைக்கு அருகே ஒட்டு கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இதை அன்புமணிதான் வைத்ததாக ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாசின் தனி உதவியாளர் சாமிநாதன், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி உமாதேவியிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் 2 வருடங்களுக்கு முன் சசிகுமார் என்பவர் மூலம் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சிசிடிவி கனெக்‌ஷன் மற்றும் வைபை இணைப்புகள் கொடுத்தனர்.

அன்புமணியின் பைனான்ஸ் மேனேஜர் சசிகுமார் மூலம் இவை பொருத்தப்பட்டன. ராமதாஸ் இல்லத்தில் நடக்கும் நிகழ்வுகள் வெளியில் உள்ள நபர்களுக்கு சென்றடைவதை சந்தேகத்தின்பேரில் தனியார் நிறுவனம் மூலம் ஆராய்ச்சி செய்தோம்.

அப்போது வீட்டில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் ராமதாசின் தொலைபேசி அழைப்புகள் போர்ட் பார்வேர்டிங் முறையில் மாற்றம் செய்து பின் சென்னையில் உள்ள நபர்களுக்கு சென்றடைவது உறுதி செய்யப்பட்டது. எனவே, ராமதாஸ் இல்ல நடவடிக்கைகள் மற்றும் தொலைபேசியை சட்ட விரோதமாக ஹேக் செய்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் விசாரணையின்போது அதனுடைய ஐபி அட்ரசை நாங்கள் கொடுத்து ஒத்துழைப்பு வழங்குகிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவுடன் வைபை மோடமையும் காவல்துறையிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

* ஜெராக்ஸ் காப்பி புகார்தான் வந்திருக்கு: டிஎஸ்பி விளக்கம்

கோட்டக்குப்பம் டிஎஸ்பி உமாதேவி கூறுகையில், ‘கடந்த 2 வருடமாக தைலாபுரத்தில் சிசிடிவி கேமரா ஹேக் செய்யப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஜெராக்ஸ் காப்பியாகதான் (நகல்) கொடுத்து இருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரிஜினல் காப்பி வேண்டும். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யலாமா? செய்ய வேண்டாமா? என்பது குறித்து எங்களுடைய உயர் அதிகாரிகள் கொடுக்கும் உத்தரவின்பேரில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அவர்கள் எங்களை வழக்கு பதிவு செய்ய சொன்னால் வழக்குப்பதிவு செய்வோம். இல்லை என்றால் சைபர் கிரைமுக்கு அனுப்பி வைப்போம். புகாரை நேரடியாக கொடுத்து இருந்தால் நன்றாக இருக்கும். ஜெராக்ஸ் காபி ஏற்றுக்கொள்ளப்படாது. ராமதாஸ் தரப்பிடம் ஒரிஜினல் காப்பி கேட்டுள்ளோம்’ என்றார்.