விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் மகுடத்துக்கு மல்லுக்கட்டும் : சின்னர் - அல்காரஸ், இன்று ஆடவர் இறுதிப் போட்டி
லண்டன்: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இன்று உலகின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர், நம்பர் 2 வீரர் கார்லோஸ் அல்காரஸ் மோதவுள்ளனர். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள், லண்டனில் கடந்த ஜூன் 23ம் தேதி முதல் நடந்து வருகின்றன.
போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர் (23), ஸ்பெயினை சேர்ந்த உலகின் நம்பர் 2 வீரரும், நடப்பு விம்பிள்டன் சாம்பியனுமான, கார்லோஸ் அல்காரஸ் (22) உடன் மோதுகிறார். சின்னர், டென்னிஸ் உலக ஜாம்பவானான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சை அரை இறுதியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
அதேபோல், அமெரிக்காவை சேர்ந்த டெய்லர் ஃபிரிட்சை அரை இறுதியில் வீழ்த்தி, அல்காரஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் பெறும் வீரருக்கு, ரூ. 35 கோடி பரிசாக கிடைக்கும். 2ம் இடம் பிடிக்கும் வீரருக்கு, ரூ. 17.6 கோடி பரிசு கிடைக்கும்.