Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வில்சன் பவர்-டிஸ்ட்ரிபியூஷன் டெக்னாலஜிஸ், பிரிட்டானியா ஆடை ஏற்றுமதி நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.820 கோடி முதலீடு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் ைகயெழுத்து: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் TN RISING ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டத்தில் நேற்று இங்கிலாந்து நாட்டின், லண்டன் நகரில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்களுடனான தொடர்ச்சியான உயர் மட்ட கூட்டங்களுக்கு தலைமை தாங்கி, பாதுகாப்பு மற்றும் விண்வெளி, கப்பல் கட்டும் நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

வில்சன் பவர்-டிஸ்ட்ரிபியூஷன் டெக்னாலஜிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ஒரு புதிய மின்சார மின்மாற்றி உற்பத்தி மையத்தை நிறுவிட ரூ.300 கோடி முதலீடு மற்றும் 543 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் உற்பத்தியில் 80 முதல் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்குச் செல்கிறது. இது, தமிழ்நாட்டின் பசுமை எரிசக்தி உற்பத்தி மூலதனமாக மாறுவதற்கான நேரடியாக பங்களிப்பை அளிப்பதோடு, அதன் மாசற்ற தொழில்நுட்ப மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்தும்.

இந்தியாவின் முன்னணி ஜவுளி ஏற்றுமதி மையமாக தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்தும் வகையில், இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட பிரிட்டானியா கார்மென்ட் பேக்கேஜிங்கின் துணை நிறுவனமான பிரிட்டானியா RFID டெக்னாலஜிஸ் இந்தியா நிறுவனம், திருப்பூர் மற்றும் நாமக்கல்லில் அதிக திறன் கொண்ட RFID Tag உற்பத்தி பிரிவை அமைக்க ரூ.520 கோடி முதலீடு மற்றும் 550 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்மூலம், ஆடைத் துறையில் தடமறிதல் மற்றும் விநியோகச் சங்கிலி டிஜிட்டல் மயமாக்கலை ஆதரிப்பதோடு, ஏற்றுமதி போட்டித்தன்மையையும் அதிகரிக்கும்.

கல்வித் துறையில், கோயம்புத்தூரில் வடிவமைப்பு சார்ந்த உயர்கல்வி நிறுவனத்தைத் தொடங்க Ecole Intuit Lab நிறுவனம், சக்தி எக்சலன்ஸ் அகாடமியுடன் கூட்டாண்மையில் இணைந்து, புதுமை மற்றும் தனித்துவ அடையாளத்தின் முக்கிய இயக்கியாக படைப்பாற்றல் பொருளாதாரம் மாறி வருவதால், இந்த முயற்சி தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறை படைப்பாற்றல் நிபுணர்களை உருவாக்கும். கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக எக்ஸிடெர் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. கூட்டு ஆராய்ச்சி, ஆசிரியர் பரிமாற்ற திட்டங்கள் மற்றும் முன்னுரிமைத் துறைகளில் உலகளாவிய அறிவு பரிமாற்றத்தை வளர்ப்பதில் இந்த கூட்டாண்மை கவனம் செலுத்தும்.

இந்த சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், துறை ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், உயர்தர சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும், இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை தமிழ்நாடு பயன்படுத்திக் கொள்வதற்கான உறுதியான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். FTA கட்டமைப்பிலிருந்து கிடைக்கும் கூடுதல் வாய்ப்புகளை ஆராய்ந்திட நேற்று பல கூடுதல் கூட்டங்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உமாநாத், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.