மலேசியாவில் நடைபெறும் ஆசியான் மாநாடு; டிரம்பை நேருக்கு நேர் சந்திக்கிறாரா மோடி?.. இந்தியா-அமெரிக்கா இடையே பனிப்போர் நீடிப்பு
டெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகப் பதற்றம் நீடித்து வரும் நிலையில், மலேசியாவில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று, அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருவது இரு நாடுகளுக்கும் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்தது. இந்த சூழலில், இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதித்ததால், இருதரப்பு உறவுகளில் மேலும் விரிசல் ஏற்பட்டது. இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்குப் பிறகு, பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் இதுவரை எந்தவொரு சர்வதேச மாநாட்டிலும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகள் நடைபெற உள்ளன. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பார் என மலேசிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறுகையில், ‘மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உலகத் தலைவர்களுடன் இந்தியப் பிரதமர் மோடியும் பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம்’ என்று உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், பிரதமர் மோடியின் பயணம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், பயணத் திட்டத்தை உறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றால், ஆசியான் - இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த ஆய்வு முக்கியத்துவம் பெறும். மேலும், குவாட் மற்றும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்களுடனும் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது. பிரதமர் மோடியின் மலேசியப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.