வேலை செய்யும் இடத்தில் வாலிபருடன் பழக்கம்; கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி: தம்பதி இருவரும் ஒன்றாக மது அருந்திய போது விபரீதம்
சென்னை: கட்டிட வேலை செய்யும் இடத்தில் வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தை கண்டித்து குடிபோதையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற கணவனை, மனைவியே கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் சைதாப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரகலாத் சர்தார்(42). இவரது முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பிங்கி(36) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பிரகலாத் சர்தார் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இதனால் சென்னை சைதாப்ேபட்டை ஜோன்ஸ் சாலையில் தங்கி தனது இரண்டாவது மனைவி பிங்கி உடன் சேர்ந்து கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில் பிரகலாத் சர்தார் உடன் பணியாற்றும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பப்லு என்பவருடன் இரண்டாவது மனைவி பிங்கி மார்க்கெட்டுக்கு சென்று வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கி வந்துள்ளார். அதேநேரம் பப்லுவுடன் பிங்கி நெருங்கி பழகி வந்ததை பிரகலாத் சர்தார் பல நேரங்களில் கண்டித்தும் வந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல் பணி முடிந்து கணவன் மனைவி ஆகியோர் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். அதுபோல் நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் மது அருந்தினர். அப்போது தனது மனைவியிடம் பப்லுவுடன் பழகுவதை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாய் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பிரகலாத் சர்தார் தனது மனைவி பிங்கியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார். பிரகலாத் சர்தாரைவிட பிங்கி 6 வயது இளையவர் என்பதால் தனது கணவரை பலமாக தாக்கி காய்கறி வெட்டும் கத்தியால் கழுத்தில் குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் பிரகலாத் சர்தார் கத்தினார். அருகில் இருந்த சக ஊழியரான பப்லு ஓடி வந்து உயிருக்கு போராடிய பிரகலாத் சர்தாரை மீட்டு சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் காயத்திற்கு கட்டு போடாமல் மாத்திரை மட்டும் கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
பின்னர் பிரகலாத் சர்தார் வீட்டிற்கு வந்து மாத்திரை போட்டு மயக்கத்தில் தூங்கினார். அப்போது கத்தியால் குத்தப்பட்ட கழுத்தில் இருந்து ரத்தம் அதிகளவில் வெளியேறியது.
இதனால் அச்சமடைந்த அவரது மனைவி பிங்கி மற்றும் பப்லு ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து சோதனை செய்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து குமரன் நகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மனைவி பிங்கியை கைது செய்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக கட்டிட ஒப்பந்ததாரர் விவேக் மற்றும் மேற்பார்வையாளர் ரகுநாத் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.