Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மனைவி பிரசவத்திற்கு வந்தவர்கள் இடையே மோதல் கோவை அரசு மருத்துவமனையில் தொழிலாளி குத்திக்கொலை: வாலிபர் கைது

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் மனைவி பிரசவத்திற்கு வந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், தொடர்புடையை வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூரை சேர்ந்தவர் விஜய் (30). இவர், திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கர்ப்பிணி மனைவி ரஞ்சனாவை (28) திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அழைத்து சென்றார். அப்போது, டாக்டர்கள் கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெறும்படி கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர், கோவை வந்து அரசு மருத்துவமனையில் மனைவியை பிரசவ வார்டில் அனுமதித்தார். அதே வார்டில் கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (23) என்பவர் தனது மனைவி கிருத்திகாவையும் அனுமதித்து இருந்தார். விக்னேஷ், இறைச்சி கடை ஊழியர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஜய்க்கும், விக்னேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, விஜய், விக்னேசை தாக்கி உள்ளார்.

இதனால் அவர் விஜய் மீது கோபத்தில் இருந்துள்ளார். இதற்கிடையே, விக்னேஷ் மனைவிக்கு குழந்தை பிறந்து வீடு திரும்பினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போதையில் அரசு மருத்துவமனைக்கு வந்த விக்னேஷ், விஜய்யிடம் பேச வேண்டும் என மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோயில் அருகே அழைத்து சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். திடீரென விக்னேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜய் நெஞ்சு, கழுத்து என 11 இடங்களில் சரமாரியாக குத்தினார்.

இதில், ரத்த வெள்ளத்தில் விஜய் சரிந்து விழுந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் விஜய்யை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். தப்பி ஓட முயன்ற விக்னேசை அங்கிருந்தவர்கள் பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.